![]() |
சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான UNICEF பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி.ஐஸ்டினா முரளிதரன் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் UNICEF நிறுவனத்தின் சிறுவர் பாதுகாப்பு பிரிவின் தலைவி ரியோனா
உள்ளிட்ட UNICEF நிறுவனத்தின் உயரதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ.மதிராஜ், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாவட்ட முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் வீ.முரளிதரன்,
சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், செரி நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்படும் சிறுவர் பாதுகாப்பு முயற்சிகள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சேவைத்தரத்தை மேம்படுத்தல், ஒட்டுமொத்த குழந்தை பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தல்,
மாவட்டத்தில் பாதிக்கப்படும் சிறுவர் சிறுமிகளை பாதுகாப்பதில் அரச உத்தியோகத்தர்களின் வகிபாகம், அதனை நடைமுறைப்படுத்தும் அரச உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பாடசாலை இடைவிலகல், சிறுவர் துஸ்பிரயோகம், தற்கொலை முயற்சிகளை முறியடித்தல் போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில்
மாவட்ட மட்டத்தில் பாதிக்கப்படும் சிறுவர் சிறுமிகளை பாதுகாப்பதில் கையாள வேண்டிய விடையங்கள், சிறுவர் நேய அலுவலகங்களாக மாற வேண்டிய அலுவலகங்கள் தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபரினால் இதன் போது ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.