மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலைய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு ஆலயத் தரிசனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பை 20 ஆயிரம் ரூபா பணத்துடன் திருட்டு போயுள்ளது .
இதனையடுத்து அங்கு காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் த.றஜிக்காந்தன் தலைமையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 10683 சசினி, 61627 அனுஷ்க்க மேற்கொண்ட விசாரணையில் பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஆலய பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதன் போது திருட்டுப்போன கைப்பையும் அதில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.