பருவப் பெயர்ச்சி மழைத் தாக்கத்திற்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்தலுடன் மட்டக்களப்பு மாவட்டம்!










வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் தாக்கங்களுக்கான முன்னெச்சிரிக்கை மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களது தலைமையில் (30) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.


மாவட்ட அணர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படும் வெள்ள அபாயம் உட்பட அதனோடு தொடர்புடைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னாயத்தங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 


இது தொடர்பாக ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இப்பருவப் பெயர்ச்சி மழையினால் ஏற்படுமென எதிர்பார்க்கப்படும் அனர்த்தங்களைத் தவிப்பதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு அதற்குத் தேவையான ஏனைய திணைக்களங்கள், உள்ளுர் அதிகார சபைகள், பொலிஸ் மற்றும் முப்படையினர், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றின் உதவிகளை உரிய நேரத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளும் இதன்போது குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பெற்றுக் கொடுக்கபட்டது. 


இதேவேளை இப்பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் காலப்பகுதியிலேயே க.பெ.த. உயர்தரப் பரீட்சை இடம்பெறவிருப்பதனால் பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையாத வகையில் இடைத்தங்கள் முகாங்களை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்ட இடங்களிலிருக்கும் பரீட்சாத்திகள் மற்றும் பொதுமக்களுக்கான போக்குவரத்து வசதிகள் முறையாக ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாகவும் திட்டமிடப்பட்டது. 


இதுதவிர இக்காலப்பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வெள்ள நீர் மேலோங்கிச் செல்லும் பாதைகள் மற்றும் பாலங்களைக் கடக்கும் பயணிகள் போன்றோரது பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டு அதற்கான எச்சரிக்கை சமிக்ஞைகளை காட்சிப்படுத்தல், விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் இதன்போது திட்டமிடப்பட்டன.


இவ்விசேட கூட்டத்திற்கு சகல பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி அதிகார சபை பிரதிநிதிகள், மத்திய மற்றும் மாகாண நீர்பாசன திணைக்கள பொறியிலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் போன்றவற்றின் பிரதம பொறியிலாளர்கள், சுகாதாரம், கல்வி, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி, மரக்கூட்டுத்தாபனம் போன்ற திணைக்களங்களின் அதிகாரிகள், பொலிஸ் திணைக்களம் மற்றும் முப்படை உயர் அதிகாரிகள், தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Powered by Blogger.