சீனா மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டு செல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி-ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா

 சீனாவை கட்டியெழுப்புவதற்கு முன்னாள் தலைவர் மாவோ சேதுங் தொடக்கம் நிகழ்கால தலைவர் ஷீ ஜின் பிங் வரை சீனாவில் செயற்பட்டு வரும் விதம் பற்றி மகிழ்ச்சியடைகின்றேன் அதேவேளை சீனா தமக்கே உரித்தான பாணியில் மார்க்சிஸத்தை முன்னோக்கி கொண்டு செல்வது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைத்த வெற்றி என  மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா தெரிவித்தார். 



சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவிற்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட குழுவொன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் தலைமையகத்தில் சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோவை உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (17)  கலந்துரையாடினர். இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 


இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலும் நிலவுகின்ற நட்புறவு இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், ஜனாதிபதி தோழர் அநுர குமார திசாநாயக்கவின் விஜயத்தின்போது மேலும் ஒருபடி உறுதி பெற்றுள்ளது  அதைப்போல என்னை உள்ளிட்ட எமது தோழர்கள் மேற்கொண்ட இந்தச் சுற்றுப்பயணத்தில் தமது நட்புறவு இன்னொருபடி உறுதியானது.


அதேவேளை சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சீனா இலங்கைக்கு வழங்குகின்ற ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு எதிர்காலத்திலும் அந்த ஒத்துழைப்பினை எதிர்பார்க்கிள்றோம். 


இந்தச் சுற்றுப்பயணத்தின்போது கட்சிப் பாடசாலைகளில் மற்றும் ஊர்களை கட்டியெழுப்புவதற்காக செயற்பட்டுள்ள விதம் பற்றிய கல்வியில் பெற்றுக்கொண்ட அனுபவம் இலங்கையின் எதிர்கால அபிவிருத்திக்கு சிறப்பாக பங்களிப்புச் செய்யும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நிலவுகின்ற நீண்டகால நட்புறவை எவராலும் சிதைக்க முடியாது அந்த நட்புறவை சிதைப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் லியூ ஜின்தாவோ இதன்போது வலியுறுத்தினார். 


நாட்டை அபிவிருத்திச்  செய்யும் வேலைத்திட்டத்திற்கு எந்தவொரு வேளையிலும் தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு சீனா தயாராக இருப்பதாகவும் எந்தவொரு நாட்டின் தன்னாதிக்கத்திற்கும் குந்தகம் ஏற்படும் வகையில் சீனா செயற்படாது என்றார். 

இந்தச் சந்திப்பில் சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சுன் ஹெய்யானை உள்ளிட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிவிவகார திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க உள்ளிட்ட தரப்பினர் கலந்துகொண்டனர்.




Powered by Blogger.