மட்டக்களப்பு நகரில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் முக்கிய சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் வீதிகளில் பிரயாணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று சனிக்கிழமை (12) இரவு மேற்கொண்டதையடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
மாவட்டத்தில் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் யூன் 30 ம் திகதி வரையிலான 6 மாதத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் வழிகாட்டலில் முக்கிய சந்திகளில் வீதியால் பிரயாணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.
இதில் முதற் கட்டமாக மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நகர் பகுதிகளில் உள்ள முக்கிய சந்திகள் வீதி சுற்றுவட்ட பகுதியில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து சம்பவதினமான நேற்று இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையில் அந்த வீதிகளின் ஊடாக பிரயாணித்த மோட்டார் சைக்கிள் வாகனங்களை நிறுத்தி பாரிய சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இதன் போது தகப்பனார் தலைகவசம் அணிந்தும் பிள்ளைகளுக்கு தலைகவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பிரயாணித்தவர்களை எச்சரித்தும் சாரதி அனுமதிபத்திரம் வாகன மற்றும் மோட்டர் சைக்கிள்களின் பதிவி புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் இல்லாது பிரயாணித்தவர்களுக்கு எதிராக தண்டப்பணம் மற்றும் வழக்கு பதிவு செய்தனர்.