அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனையில் 140 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 வியாபரிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (6) பகல் கைது செய்துள்ளதுடன் இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் பொதிசெய்யும் இயந்திரம் நிறுவை தராசு போன்றவைகளை மீட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் யு.எல்.எஸ்.ஆப்தீன் தலைமையில் பொலிஸ் பரிசோதகர் அனுர, பொலிஸ் கொஸ்தாப்பரர்களான முனசிங்க, மென்டிஸ், சியாம், மானவடு, குமார, என்நாயக்கா கொண்ட குழுவினர்; சம்பவதினமான நேற்று பகல் அட்டாளைச்சேனை பகுதியிலுள்ள வீதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாறுவேடத்தில் இருந்த பொலிசார் அவர்களை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது 84 கிராம் 620 மில்லிக்கிராம் மற்றும் 31 கிராம் 50 மில்லிக்கிராம் மற்றும் 24 கிராம் 94 மில்லிக்கிராம் ஆக 140 கிராம் ஜஸ் போதைப் பொருளை 3 பேரிடமிருந்து மீட்டதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
இதில் 84 கிராம் 620 மில்லிக்கிராமுடன் கைது செய்யப்பட்ட 40 வயதுடையவர் 2007ம் ஆண்டு குற்றசாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றில் ஆஜராகாததையடுத்து நீதிமன்ற பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 40,36,40 வயதுடைய மூன்று பேரும் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதையடுத்து இவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.