மட்டக்களப்பு கரடியனாறு இந்து வித்தியாயலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில் 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (30) அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலையில் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து சம்பவதினமான இன்று பகல் 195 மாணவர்;களுக்கு வழங்கப்பட்டது இதனை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து அவர்களை உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த உணவை பரிசோதனை செய்ததுடன் வழங்கப்பட்ட கோழி இறைச்சி பனிக்கட்டியில் இருந்து எடுத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதர பரிசோதகர்களின் சோதனையில் முதல் கட்டமாக தெரியவந்துள்ளதையடுத்து இது தொடர்பாக பொதுசுகாதார பாசோதகர்கள் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து பாடசாலையில் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேவேளை கடந்த மாதம் இதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 25 மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கம் காரணமாக வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டதுடன் உணவு வழங்கிய பெண்ணை கைது செய்தமை குறிப்பிடதக்கது.